வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக தெற்கில் குரல் கொடுக்கும் நிலைமை தொடர்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27.05.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலின் போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படும் போதும் காணிகள் விடுவிக்கப்படும் போதும் தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு குடிதண்ணீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான செலவு அதிகம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இல்லை என்றும் இதன் காரணமாக பல சவால்களை எதிர்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும், விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப் பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவற்றை முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.








