சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து கல்லூரியில் இன்று காலை 8:30 மணிக்கு “பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பவனியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது விழிப்புணர்வு பவனியானது பாடசாலை முன்றலில் ஆரம்பமாகி பின் பருத்தித்துறை ஓராம் கட்டை சந்தியிலிருந்து பிரதான வீதி ஊடாக பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து வீ.எம். வீதி ஊடாக 10:30 மணியளவில் பாடசாலை முன்றலில் நிறைவு பெற்றது.
குறித்த பவனி நிகழ்வில் பாடசாலை மாணவிகள் பிளாஸ்டிக் பாவனையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இடர்பாடுகள் மற்றும் தீர்வு என்பன தொடர்பான பதாகைகள் தாங்கி சென்றனர்.
அத்துடன் இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஆகியோர் மட்டுமின்றி பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







