இலங்கை கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை படகை கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
இச் சம்பவம் மன வேதனையை தருவதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடற்பகுதிக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக அழித்து வருகிறது.
இதன் காரணமாக நாம் கடற்படையினருக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர்களை கைது செய்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இந்திய இழுவைப் படகையை கைது செய்ய முற்பட்டபோது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய அந்த கடற்படை வீரருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.
மேலும் இந்திய மீனவர்களிடம் வினையமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் உங்கள் கடல் எல்லையை தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம்.
அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காக கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம்பெறுகிறது.
ஆகவே தொடர்ந்தும் கடற்படையினர் அத்துமீறிவரும் இந்திய மீனவர்களை கைதுசெய்து நமது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.