சீனா, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்ய விரும்புவதாகக் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலை ஒளிபரப்பப்பட்ட ஃபொக்ஸ் நியூஸின் “ஹானிட்டி” நிகழ்ச்சியின் நேர்காணலில் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது, அமெரிக்க மசகு எண்ணெய் மற்றும் சோயாபீன்ஸை அதிகமாக கொள்வனவு செய்ய விரும்புவதாக, சீனா ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார்.
அமரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஷி ஜின்பிங்குடனான சந்திப்பு கடந்த மே 14 அன்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன தலைவருடன் ட்ரம்ப் ஒரு “நல்ல சந்திப்பை” நடத்தினார் என்றும் அவர்கள் வர்த்தகம், ஈரான் மற்றும் தாய்வான் குறித்து விவாதித்தனர் எனவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, சீனா அதிக அமெரிக்காவிடம் மசகு எண்ணெயை கொள்வனவு செய்ய விரும்புவதாக ஷி கூறினார் என்றும் எரிசக்திப் பரிமாற்றத்திற்காக அந்த நீரிணை திறந்திருக்க வேண்டும் என இரு தரப்பினரும் (அமெரிக்கா- சீனா) விரும்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய எண்ணெயின் மிகப்பெரிய தொகையை சீனா கொள்வனவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்க விதித்த வரிகளுக்கு முன்பு, சீனா சிறிய அளவிலான அமெரிக்க எண்ணெயை மட்டுமே கொள்வனவு செய்தது. அத்துடன் சோயாபீன்ஸ் கொள்முதலும் கடுமையாகக் குறைந்துள்ளது, இந்த நிலையில் சீனா பிரேசிலிடம் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான சூழலில் ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.







