ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிகரமான அரசியல் பயணத்தை தடுப்பதற்காக அரசியல் நயவஞ்சகர்கள் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம்(25) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதன்போது, கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, நாட்டின் சொத்துக்களை திருடிய திருடர்களுடன் தாம் ஒருபோதும் இணைந்து செயல்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் இணைய போவதில்லை எனவும், முன்னதாக அவரது கோரிக்கையை ஏற்று இணைந்திருந்தால் கெஹெலிய ரம்புக்வெல்ல போன்றவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
220 இலட்சம் குடிமக்களுக்கும் பொறுப்புக்கூறக் கூடிய சரியான திசையில் பயணிக்கும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் அரசாங்கத்தை தாம் அமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முடியாட்சி தருவதாக கூறினாலும் ராஜபக்க்ஷக்களின் வாயில்காப்பாளராக செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, நாட்டிலுள்ள பிரஜைகள் மற்றும் வர்த்தகர்களின் தனிப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி விரும்புவதில்லை என தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி வங்கி மற்றும் நிதி மன்றத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் நேற்று(25) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தேசிய ஆடைகளை அணிபவர்களுக்கும், சொத்துக்களை கொண்டிருப்பவர்களுக்கு எதிரானவர்கள் என சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அது முற்றிலும் தவராக கருத்து எனவும், சந்தர்ப்பவாதிகளாக மாறி தேசிய ஆடைகளை அணிந்து கொண்டு, மக்களின் சொத்துக்களை கையகப்படுத்தி, சொத்துக்களை சேர்ப்பவர்களுக்கு எதிராகவே தாம் குரல் எழுப்பி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.