தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் சிறுவன் உள்ளமையினால், காணொளியை நீக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக, சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு பெண்கள், சிறுவன் ஒருவருடன் கையடக்க தொலைபேசி கடைக்கு சென்று தொலைபேசி மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் சிறுவனின் உருவம் அடங்கிய காணொளி பரவியமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போதே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக சிறுவனின் உரிமை மீறப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறி செய்யப்பட்ட ஒரு செயலாகும்.
ஒரு குற்றச் செயல் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் தொடர்பான அல்லது சந்தேகப்படும்படியான படங்களை பரப்புவது நெறிமுறைக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், வீடியோவை இணையத்தில் வெளியிட்ட நபரை தற்போதுள்ள சட்டத்தின்படி கையாள்வதில் சிரமம் என அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, எந்தவொரு குற்றச்சாட்டையும் இணையத்தில் வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்டங்கள் அவசரமாக தயாரிக்கப்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.