இலங்கையில் பாரியளவில் ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ஒன்லைன் நிறுவனத்தின் ஊடாக நாட்டு மக்களிடம் பல கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் செயலாளர் ஆகியோரது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிறுவனத்தின் ஊடாக 55 வங்கிக் கணக்குகள் ஊடாக பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் பணிப்பாளரான 25 வயதான பொலனறுவையைச் சேர்ந்த எரந்த தில்ஷான் சமரஜீவ என்பவரும், நிறுவனத்தின் செயலாளரான மாத்தளையைச் சேர்ந்த 23 வயதான ஹன்சிகா செவ்வந்தி என்ற யுவதியும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத பிரமிட் வர்த்தகத்தின் ஊடாக நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இவ்வாறான இணைய வழி மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








