மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் 10/09/2024 அன்று முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் இடம் பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினை, உள்ளூர் இழுவைமடி பிரச்சினை, தடை செய்யப்பட்ட மீன்பிடி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கட்டுப்படுத்தக் கோரியே இப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
இதே வேளை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கு புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், பிரதம அழைப்பாளராக கலாநிதி சூசைதாஸன் அவர்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.










