தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி வரலாற்றில் அதிக பொய்களை கூறிய தலைவராக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமது தலைவர்கள் அன்று ஆட்சி அதிகாரத்தை பெற்றது நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய சேவைகளை செய்த பின்னரே. ஆனால் இந்த அரசாங்கம் மக்களிடையே பொய்களை பரப்பியே ஆட்சியை பிடித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தின் போது அதற்கு எதிராக ஜே.வி.பி விமர்சனம் செய்தது. அப்போது விமர்சித்தவர்கள் இன்று மாத்தறை கூட்டங்களுக்கு வருவது அவர்கள் எதிர்த்த அதே அதிவேக நெடுஞ்சாலை வழியாகத்தான். அரசாங்கத்தின் புனைவு தன்மையை தெளிவாக காட்டும் ஒரு சம்பவமே இது.

முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு தலைமைத்துவம் வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. யுத்தத்தின் போது ஏதேனும் நடந்திருந்தால், அதற்கு தலைமை தாங்கியவரிடம் கேட்க வேண்டும். ஆனால் இன்று தலைவர் சொன்னதை செய்த இராணுவ வீரர்களை தாக்கும் செயல்பாடுகள் நடைபெறுகின்றன.

நாங்கள் புலம்பவில்லை. எங்களுக்கு பணி செய்யும் அனுபவம் உள்ளது. சவால்களை எதிர்கொள்ள முடியும். அதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். விரைவில் மக்களின் அரசாங்கத்தை உருவாக்குவோம். அதுவரை மக்களுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகள் மூலம் பலமான அணியை உருவாக்குவதே எங்கள் முயற்சியாகும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here