அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.

அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19ஆம் திகதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை கடந்த மாதம் 18ம் திகதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் வரும் 19-ம் திகதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.

தேசிய பாதுகாப்புக்கான வெளிப்படையான ஆபத்து முதல் திருத்த உரிமைகள் தொடர்பான கவலைகளைவிட அதிகமாக உள்ளது எனவும் தீர்ப்பளித்ததுடன், டிக் டாக் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here