மியன்மார் ஏதிலிகள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
ஏதிலிகள் விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் நினைவுபடுத்தினார்.
மியன்மார் ஏதிலிகளை மீண்டும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பாமல் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் உதவியோடு அவர்கள் விரும்பும் நாட்டில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ குடியமர்த்துவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தின் போதும் நாட்டிற்கு வருகை தந்த அகதிகள் , ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் உதவியோடு அனுப்பப்பட்டதாக சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேநேரம் உள்நாட்டு யுத்தத்தின் போது இலங்கையிலிருந்து வெளியேறிய பலர் உலக நாடுகளில் அகதிகளாக வசிப்பதனையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் நினைவுபடுத்தியிருந்தார்.








