அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (1/10/2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள்,
நாட்டில் தைப்பொங்கல் வருகின்றது. இதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி உள்ளிட்ட அரிசி வகைகள் தேவைப்படுகின்றது. எனினும், அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது.
கட்டுப்பாட்டு விலைக்கு தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகின்றது. அவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கொழும்பிலிருந்து இந்த பகுதிக்கு அரிசியை கொண்டு வருவதாக இருந்தால் போக்குவரத்து கட்டணம், சுமை தாங்கிகளின் கட்டணம் என பல விடயங்கள் இருக்கின்றன.
எனவே, கட்டுப்பாட்டு விலைக்கு விற்கமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.







