இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பதியில் பாதுகாப்பு தரப்பினரால் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை உண்மையே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அல்ஜெசீராவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை.
விமானப்படையின் சில உறுப்பினர்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறான தாக்குதல்கள் பெருவாரியாக இடம்பெற்றதாக நான் கருதவில்லை என்று ரணில் கூறியுள்ளார்.
அதேநேரம் நாட்டில் எந்த சமூகத்துக்கும் இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தாம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ, ஏனைய ராஜபக்சக்களையோ பாதுகாக்க முற்படவில்லை எனவும் அவர் கூறினார்.
நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்த போது, தாம் அதனை மீட்க நடவடிக்கை எடுத்ததாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதே நேரம் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, அந்த பதவிக்குப் பொருத்தமானவர் என்பதாலேயே அவரை இராணுவத்தளபதியாக நியமித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.








