இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்றைய தினம் சமர்ப்பித்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் யாப்பின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பொதுச்சபை கூட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொதுச்சபை கூட்டப்படவில்லை என அறிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கைத் தமிழரசு கட்சியின் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம், சேவியர் குலநாயகம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளன.








