– புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல்
– எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும்
ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநராக இன்று (27) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பின்வருமாறு தெரிவித்தார்:
தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன்.
வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது. வேறொருவர் எனக்குப் பதவியை தந்திருந்தாலும் நான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கவும் மாட்டேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








