எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அபிவிருத்திகளைச் செய்ய முடியாது எனக் கூறுவது பொய்யான கருத்தாகும் என வன்னி மாவட்டத்தில் உதைபந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
வவுனியா – கொக்குவெளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அபிவிருத்திகளைச் செய்ய முடியாது என்பது பொய்யான கருத்தாகும்.
கடந்த காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அவ்வாறு எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை.
பாதீட்டு ஆதரவளிக்கிறோம் நீங்கள் எங்களது அபிவிருத்திக்கான நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு அரசாங்கத்துடன் பேரம் பேச வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு முறையும் செய்வதால் அரசாங்கம் அதற்கான நிதிகளை வழங்கும்.
அதனை விடுத்து மதுபானசாலை அனுமதிப் பதிவுப் பத்திரத்துக்காக கை உயர்த்துவதால், மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது.
அதேநேரம், தெற்கிலிருந்து கொண்டு ஜே.வி.பிக்கு தாராளமாக வாக்களிக்கலாம்.
எனினும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் வேறு.
இங்கு அரசியல் உரிமை, காணி உரிமை எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிலை உள்ளது.
ஊழல் ஒழிப்புக்காகத் தேசிய மக்கள் சக்திக்காக வாக்களிக்கலாம் என்ற போதிலும், அது தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது என உதைபந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.







