இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக கட்டமைப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட் பங்குதாரர்களுடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC தலைவர் ஜெய் ஷா இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின், அகமதாபாத்தில் இருந்து இலங்கைக்கான இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இன்று ஆரம்பிக்கப்பட்ட FitsAir விமான சேவையின் முதல் நேரடி விமானத்தில் ஜெய் ஷா கொழும்பு வந்திறங்கியுள்ளார்.
ஜெய் ஷா தனது பயணத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்களை சந்திக்கவுள்ளார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய இடைக்கால மாற்று நிர்வாக குழு மற்றும் நாட்டின் விளையாட்டு நிர்வாகத்திற்கான எதிர்கால வழிமுறைகள் குறித்து இந்த பேச்சுவார்தையில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளுடன் இணங்கி பயணிக்கும் வகையில் அமைவதை உறுதிசெய்வது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையில் நடந்து வரும் தொடர் கலந்துரையாடல்களின் பின்னணியில் இந்த வருகை அமைந்துள்ளது.








