நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4 தனியார் வர்த்தக வங்கிகளின் முகாமையாளர்களை பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு கைது செய்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு வங்கி முகாமையாளர்களும் பணியாற்றும் அந்தந்த தனியார் வங்கிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இவ்வாறு கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
இந்த மோசடியில் பிரதானமாக ஈடுபட்டதாக கூறப்படும் நபர், கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களுக்கும் வாரந்தோறும் பணம் வழங்கியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு அதிகாரிக்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாரத்திற்கு ரூ. 30,000, ரூ. 50,000 மற்றும் ரூ. 100,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 வங்கி முகாமையாளர்களில் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் ரூ. 1 மில்லியன் பணத்தை பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவு (FCID) முன்னெடுத்து வருகிறது.
இறக்குமதி ஆவணங்கள் இன்றி பாரிய அந்நிய செலாவணி பரிமாற்றம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது நாட்டின் வங்கி முறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








