பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள கல்வி முறையை மாணவர் சமூகத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில் மாற்றுவதன் மூலம் கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் பொருத்தமானதாக மாற்ற தாம் விரும்புவதாகவும், அந்தப் பாடங்களை ஒருபோதும் நீக்க எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here