அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை 40 கிலோமீட்டர் வரை துரத்திச் சென்று கைப்பற்றிய சம்பவம் பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸ் குழுவினர் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
அதனை மதிக்காது கனரக வாகனம் நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.
இந்நிலையில் சுமார் 40 கிலோமீட்டர் வரை குறித்த கனரக வாகனத்தை கலைத்துச் சென்றுள்ள நிலையில் மேலும் தப்பிக்க முடியாத நிலையில் கனரக வாகன சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த கனரக வாகனத்தை பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்பற்றியுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை நேற்றுமுன் தினமும் இன்றுமாக சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[யாழ் நிருபர் – முரளீதரன்]








