அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு என தீர்வின்றி தொடரும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டா முடியாது எனவும், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்க உள்ளோம். இப்போராட்டத்தில் அனைவரும் ஆதரவு தந்து போராட்டத்தை வலுப்பெறச் செய்ய வேண்டும்.

எமது பிள்ளைகள் தொடர்பில் நீண்ட காலமாக போராடி வருகிறோம். போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், தீர்வினை தருவதற்கு அரசு தயாராக இல்லை.

மாறி மாறி ஆட்சிபீடம் ஏறும் அரச தலைவர்கள் தீர்வு தருவதாக கூறுவார்கள். நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருகின்றோம்.

எமது வலிகளையும், உணர்வுகளையும் அறிந்தவராக ஆட்சி பீடத்தில் ஏறிய ஜனாதிபதியும் எமக்கு தீர்வினைத் தர முன்வரவில்லை.

காணாமல் போனோர் தொடர்பாக போராடும் வலையமைப்பினை தானாக சந்திக்க முன்வரவும் இல்லை. அது தொடர்பில் பேசவும் இல்லை.

அரசியல் கைதிகளாக சிறையில் துன்பப்படுகின்றார்கள். மக்களின் காணிகளில் இராணுவத்தினர் இருக்கின்றார்கள். மக்களின் காணிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியல் தீர்வுகள் இல்லை. இவ்வாறான நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடி சர்வதேசத்துக்கு காட்ட முனைகின்றனர்.

1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் சுதந்திரத்தை பெறவில்லை.

இந்த நிலையில்தான் எதிவரும் 4ம் திகதி சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here