ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் (Truth Social) தள பதிவின் ஊடாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடைய கப்பல்கள் உட்பட, நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறித்த நாடுகள் எந்த நிரூபனத்தையும் வெளியிடாத நிலையில் ஈரானும் இதற்குப் பதிலளிக்கவில்லை.
இதேவேளை பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கப் பிரதிநிதிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள ட்ரம்ப், தற்பொழுது போர் அச்சுறுத்தல் பெரிதாகி வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஹோர்முஸ்நீரிணையை மூடுவதற்கான ஈரானின் நடவடிக்கை இறுதியில் அதன் சொந்தப் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்றும், ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா இதனால் பெரியளவில் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








