காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வை பெற்றுத் தரவில்லை.எனவே இம்முறை இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கு எந்தவித பலனும் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று(27.08) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(30) திகதி வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து இரு மாவட்டங்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களும் இணைந்து யாழ் மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களும் இணைந்து திருகோணமலை மாவட்டத்திலும் அன்றைய தினம் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இதற்கு வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் சரி சர்வதேச அரசாங்கத்திடம் இருந்தும் சரி எவ்வித சமிஞ்ஞைகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக சர்வதேசத்திடம் குரல் எழுப்பி வருகிறோம்.எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஆரியகுள சந்தி யில் முனியப்பர் கோவில் வளாகம் வரையும், எமது போராட்டம் மற்றும் ஊர்வலம் இடம் பெறும்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு எமது உறவுகளை மீட்க குரல் கொடுப்போம்.காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க அனைவரும் அணி திரள வேண்டும்.அனைவரும் ஒத்துழைத்தால் மாத்திரமே தீர்வு கிடைக்கும்.வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள்,யுவதிகள்,மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பொது மக்கள் ,அரசியல் பிரதி நிதிகள்,சமூக மட்ட அமைப்புக்கள் அணைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க அனைவரும் அணி திரள வேண்டும்.அனைவரும் ஒத்துழைத்தால் மாத்திரமே தீர்வு கிடைக்கும்.வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள்,யுவதிகள்,மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பொதுமக்கள் ,அரசியல் பிரதிநிதிகள்,சமூக மட்ட அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும்.
இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை.நாங்கள் எவரையும் ஜனாதிபதியாக ஆதரிக்கவில்லை.எப்படியாக இருந்தாலும் ஜனாதிபதியாக சிங்கள ஆட்சியாளர்கள் வரப் போகின்றனர்.அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. இதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பி நிற்கின்றோம்.
எவராலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு எந்த பலனும் இல்லை.காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களில் ஒரு சில அரசியல் பிரதிநிதிகள் எமக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஏனையோர் எவ்வித ஆதரவும் வழங்கவில்லை.வருகின்றவர்கள் எமக்கு நீதியை பெற்றுத் தருவார்கள் என்றால் நாங்கள் அவர்களுடன் கதைக்க முடியும்.







