தியாகத்தாய் அன்னைபூபதியினதும், தியாகதீபம் திலிபன் அவர்களினதும் அகிம்சைப் போராட்டங்களாலும், அதன்பின்னரான ஆயுதப் போராட்ட காலத்திலும் நிகழ்த்தப்பட்ட உயிர்த்தியாகங்களின் உந்துதலால் உருப்பெற்ற, விடுதலைக்கனலின் வீரியம் குறைந்துவிட்டதாக, எமது மக்களின் விடுதலை தாகத்தை மலினப்படுத்துவோர் மார்தட்டிக் கொண்டாலும், இனவிடுதலை என்ற  இறுதி இலக்கை அடையும் வரை திகாயகங்களால் கட்டமைக்கப்பட்ட எங்கள் அறப்போரின் வீரியம் ஒருபோதும் ஓயப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மாவட்டக் கிளைப் பணிமனையில் நேற்றையதினம் (19/04/2025) உணர்வெழுச்சியோடு நடைபெற்ற அன்னைபூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தலில் நினைவுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் வட்டாரக்கிளைத் தலைவி குணலக்சுமி குலவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்ச்செல்வி கனகராசா நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார். அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி என்பவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், போராளிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர் செல்வரட்ணம் தனுபன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here