யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த போது இந்திக்க தலைமையிலான யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடினார். சந்தேக நபரிடமிருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரதான சந்தேக நபரை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here