வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று காலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று இரவு சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 6 ஆவது மாடியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது, உந்துருளியில் பிரவேசித்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 39 வயதுடைய அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க அறிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரான டேன் பிரியசாத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொலன்னாவை நகரசபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here