ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 26ஆம் திகதி தபால் நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 712,319 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, தமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.






