கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கி வந்த நெக்ஸ்ட் ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டதையடுத்து, 1,400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதுகுறித்து இன்று (மே 22) தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலீட்டு வாரியத்துடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பதில் தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்,
“நிறுவனத்தின் நான்கு பிரிவுகளில் 2,825 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 1,416 பேர் வேலை இழப்பதாக தகவல் உள்ளது,” என்றார்.
மேலும், தொழிற்சாலை திடீரென திங்கட்கிழமை இரவு வாட்ஸ்அப் செய்தி மூலம் மூடப்பட்டதாகவும், தொழிலாளர் துறைக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையில், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் நிதி இழப்புகள் காரணமாக தொழிற்சாலை மூடப்படுவதாகவும், இரண்டு மாத சம்பளம் உள்ளிட்ட வேலை இழப்புத் தீர்வுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








