நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முக்கிய மத திருவிழாக்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மொழி கேள்வி நேரத்தில் உரையாற்றிய அவர், திருவிழா காலங்களில் பக்தர்கள் வசதியாக பயணிக்கும் வகையில் விசேட ரயில் சேவைகளை இயக்குவதற்கான பரிந்துரைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வடக்கு ரயில் பாதை தற்போது முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய ரயில்கள் தற்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் செல்ல கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில் சேவைகளில் தற்போதும் சில சிறு குறைபாடுகள் இருப்பினும், எதிர்வரும் திருவிழா காலத்தில் மக்களுக்கு தடையற்ற, பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்திற்கு உறுதியளித்தார்.








