இலங்கைக்கு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறையில் (CID) இன்று (ஏப்ரல் 11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் சமர்ப்பித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தணிக்கை அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையானது, கேள்விக்குட்பட்ட காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான நடைமுறைகள்,முறைகேடுகள் உள்ளிட்டவற்றை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் நிலக்கரி கொள்முதல் குறித்து விசாரணை மேற்கொள்ள பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை அரசாங்கம் நியமிக்கும் என சபை முதல்வரிடம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.








