பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கதைப்பதற்கு கால தாமதம் ஆகிவிட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் நேற்று (3/16/2025) தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், ஏப்ரல் 10 மற்றும் மே மாதங்களில் இரண்டு நாள் விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இந்த விவகாரம் தொடர்பாக ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புவோம்,” என்று அவர் கூறினார்.

விவாதத்தை நடத்துவதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் வாதிட்டதாகவும், எனினும் விவாதத்திற்கான திகதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.

“நாட்டில் ஜனநாயகம் மற்றும் நீதிக்காக நாங்கள் விவாதத்தை நடத்துவோம். மக்கள் உண்மையை அறிய வேண்டும்,” என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பட்டலந்த சம்பவம் குறித்து முழுவதும் அறிந்தவர் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க என்றும், அல் ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் கேள்வியெழுப்பும் வரை அவர் அதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

“இன்று இல்லை. கடந்த 35 ஆண்டுகளாக ரணில் இதைப் பற்றிப் பேசியிருக்கலாம். அல் ஜசீரா அதைப் பற்றிப் பேசும் வரை அவர் எதுவும் சொல்லவில்லை. ரணில் இப்போது மிகவும் காலம் தாழ்த்திவிட்டார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here