கற்பிட்டி துரையடியிலிருந்து முகத்துவாரம் கிராமத்திற்கான சுமார் 800 மீட்டர் கடல்வழி போக்குவரத்தில் அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் இப்பகுதி மக்களின் கடல்வழி  போக்குவரத்து சீர் செய்யப்படாமலும் பாதுகாப்பற்ற முறையிலும் காணப்படுவதுடன் தரைவழிப் போக்குவரத்துக்கான மேம்பாலம் அமைக்கப்படாமல் நீண்ட நாட்களாக இழுத்தடிப்பு செய்யப்படுகின்றதாகவும் முகத்துவாரம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

துரையடியிலிருந்து முகத்துவாரம் நோக்கி இடம்பெற்று வரும் கடல்வழி போக்குவரத்து  பாதுகாப்பற்ற நிலையிலேயே  காணப்படுவதுடன் இரு கரையிலும் நிரந்தரமான இறங்குதுறையும் அமைக்கப்படாது தற்காலிக பாதுகாப்பற்ற இறங்கு துறைகளே உள்ளது.

முகத்துவாரம் கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தமிழ் மொழி பாடசாலை மற்றும் சிங்கள மொழி பாடசாலை என இரண்டு பாடசாலைகள் காணப்படும் நிலையில் பாடசாலைக்கான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சகலரும் வெளி ஊர்களில் இருந்து முகத்துவாரத்திற்கு பாதுகாப்பற்ற கடல்வழி படகு சேவை மூலமே  தமது பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முகத்துவாரத்தில் உள்ள மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர்வதற்க்கும் தினசரி இந்த பாதுகாப்பற்ற கடல்வழிப் பயணத்தையே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மேற்படி பாதுகாப்பற்ற படகு சேவையை வருடா வருடம் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 08 தொடக்கம் 10 இலட்சம் ரூபாவிற்கு கற்பிட்டி பிரதேச சபையின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கும் படகு சேவை நடத்துனர். பயணிகள் படகை நிறுத்துவதற்கான நிரந்தர இறங்கு துறையை கூட அமைத்து தராது இழுத்தடிப்புச் செய்யப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மீன்பிடி மற்றும் தெங்கு உற்பத்தி பொருளாதாரமாக கொண்டு விளங்கும் முகத்துவாரம் கிராம மக்களின் அத்தியாவசிய சகல தேவைகள் நிமித்தமும் கற்பிட்டி நோக்கிய பாதுகாப்பற்ற சுமார் 800 மீட்டர் கடல்வழி படகு பயணத்தையையே நம்பி இருக்க வேண்டிய நிலை. இது விடயம் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் வாயிலாக புதிய அரசாங்கம் கவனத்தில் எடுத்து முகத்துவாரம் கிராம மக்களின் வாழ்வில் விடிவிற்கான மேம் பாலம் அமைக்கும் திட்டத்தை உடன் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

[கற்பிட்டி நிருபர் – எம்.எச்.எம். சியாஜ்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here