பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதன்போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டலில் வழக்கின் சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதேநேரம் யோஷித ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆஜராகி, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணையை இம்மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தெஹிவளை மற்றும் ரத்மலானை பகுதிகளில் உள்ள 5 காணித் துண்டுகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








