பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பெருந்தோட்ட மக்களின் குரல் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் வியாழக்கிழமை (ஜனவரி 16) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நாட்டின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் வாழும் தமிழர்களின் விளிம்புநிலை சமூகமான மலையக தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீடு மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மலையக மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய பிரதமர், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வசதிகள் விடயத்தில் நேரடியாகத் தலையிடுவதாகவும் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு வசதிகள், காணி மற்றும் வீடுகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மக்களின் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தோனி இயேசுதாசன், நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ஹசந்தி, தேசிய நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜன் உட்பட உறுப்பினர்கள் குழு கலந்துகொண்டது.








