பிரமிட் திட்டம் மூலம் 350 கோடி ரூபாவை மோசடி செய்த பெண் உட்பட மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
Ride To Three Freedom Sri Lanka அல்லது R3F என்ற பதத்தின் மூலம் டிஜிட்டல் நாணயத்தைப் பயன்படுத்தி பிரமிட் திட்டம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
2R3F செயலி மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்கலாம் என மோசடியாளர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விளம்பரங்களை செய்திருந்தனர்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் சுமார் 5,500 பேர் இந்த மோசடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 31,000 கணக்குகள் தொடங்கப்பட்டு 10 மாதங்களில் முதலீடு செய்த தொகையை விட நான்கு மடங்கு சம்பாதிக்கலாம் என்றும் நாளாந்தம் ஒரு வீதம் டிவிடெண்ட் பெறலாம் என்றும் மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, இந்த மோசடி மூலம் சுமார் 350 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ஆரம்பத்தில் சுமார் 50 கோடி ரூபாவை வாடிக்கையாளர்களுக்கு இலாபமாக வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு தொகை இதேபோன்ற பிரமிட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.








