ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு நேற்று (27/04/2025) அனுமதி வழங்கப்பட்டது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாப்பரசர் பிரான்சிஸின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் வத்திக்கானுக்குப் பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 நாட்கள் வத்திக்கானில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதன் 2-வது நாளான நேற்று பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறையை பொதுமக்கள் பார்வையிட நேற்று அனுமதிக்கப்பட்டது. அதன்படி ரோம் மட்டுமின்றி இத்தாலி முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பாப்பரசரின் கல்லறையை பார்வையிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத பலரும், கல்லறையை பார்வையிட சென்று வருகின்றனர்.இதைப்போல வெளிநாடுகளில் இருந்து சென்று வத்திக்கானில் தங்கியிருக்கும் பலரும் பாப்பரசரின் கல்லறையில் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இதனால் புனித மேரி பசிலிக்கா பேராலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பலரும் கண்ணீருடன் பாப்பரசரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.








