தொழிலதிபர் பி.எஸ். சாமி அவர்களின் மறைவு தமிழ் இனத்திற்கே பேரிழப்பாக அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“தொழிலதாபர் சாமி அண்ணன் அவர்களுடன் எனக்கும் எமது கட்சியினருக்கும் நீண்ட உறவு காணப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான வைத்தியசாலையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது, என்னை அணுகி மருத்துவ உபகரணங்களை யாழ்ப்பாணம் எடுத்து வருவதற்கான அனுமதிகளை பெற்றுத் தருமாறு கோரியிருந்தார்.
அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாடி அந்த அனுமதிகளை பெற்றுத் கொடுத்திருந்தேன்.
அதேபோன்று, தினக்குரல் பத்திரிகையை ஆரம்பித்த காலத்தில் தினமுரசு பத்திரிகையை முன்னுதாரணமாக காட்டி தன்னுடைய பணியாளர்களை உற்சாகப்படுத்திய அண்ணன் சாமி அவர்கள்,
எமது பகுதிகளில் காத்திரமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததுடன், தொடர்ச்சியாக என்னுடன் தொடர்பு கொண்டு பல்வேறு விடயங்களை பிரஸ்தாபிக்கும் ஒருவராகவே விளங்கியிருந்தார்.
அன்னாரின் இழப்பு, அவரின் குடும்பத்தினர், நிறுவன பணியாளர்கள் என்பதை தாண்டி, தமிழ் மக்களுக்கே பேரிழப்பாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








