யாழ். மாவட்டத்தில் இம்முறை 04 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் புதிய வாக்காளர்களாக 02ஆயிரத்து 463 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று (02.09) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை நீதியானதும் நியாயமானதுமான தேர்தலாக நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.நேற்றைய தினம் வாக்காளர் அட்டைகள் பிரதம தபால் அலுவலகத்துக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றிலிருந்து வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ். மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்புக்காக ஏற்படுத்தப்பட் டுள்ள நிலையில், யாழ். மத்திய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும் தபால் மூல வாக்களிப்பு எண்ணும் 14 நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே, யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் உரிய காலப் பகுதியில் தங்கள் பிரதேச தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







