இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதும் நிலை கொண்ருப்பதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையோ அல்லது பலத்த மழையோ காணப்படலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வடமேல், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
எதிர்வரும் வியாழக்கிழமை (14) வரை இந்த மழையுடனான காலநிலை நீடிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், அதன் பின்னர் மழை வீழ்ச்சியின் அளவு குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம், குருணாகல், கம்பஹா, பொலன்னறுவை, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தில் உடபலாத்த, பாதஹேவாஹெட்ட, யடினுவர, கங்கா இஹல கோரலே, அக்குரணை, கங்கவட்ட கோரலே, தொலுவ, பஸ்பாகே கோரலே மற்றும் பன்விலை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, ரம்புக்கணை, மாவனெல்லை, கேகாலை, புலத்கொ{ஹபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும், மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை, அம்பன்கங்க கோரல மற்றும் நாவுல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








