குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் மத்திய வங்கி ஆளுநர்களின் தர வரிசை தொடர்பான வருடாந்த அறிக்கைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024ஆம் ஆண்டுக்கான A தரத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவாலான காலங்களில் மத்திய வங்கியினது ஆளுநரால் வழங்கப்பட்ட விதிவிலக்கான தலைமைத்துவத்தையும் மூலோபாய நிபுணத்துவத்தையும் இது பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட இந்த A தரம், பணவீக்க முகாமைத்துவம், பொருளாதார வளர்ச்சி, நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித கட்டுப்பாடு போன்ற முக்கிய துறைகளில் ஆளுநரின் ஆற்றலுக்கான வெற்றியையும் நிரூபித்துள்ளது.
உலகளவில் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் இந்த விருது, ஆளுநரின் சிறப்பான செயல்பாடு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும் அங்கீகரித்துள்ளது.








