மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள சிறு போக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (8/4/2025) மதியம் மன்னார் உயிலங்குளத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற, குறித்த கூட்டத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்,வதிவிட முகாமையாளர், விவசாய விரிவாக்கல் பணிப்பாளர், கட்டுக்கரை குளத்தின் திட்டமிட்ட விவசாய அமைப்பு, கமநல சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய பட்டதோடு,பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இவ்வருடம் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத்தை உள்ளடக்கியதாக 31 ஆயிரத்து 275 ஏக்கர் நிலத்திற்கு 10 இற்கு 1 என்ற அடிப்படையில் 3349 ஏக்கர் என்ற அளவில் சிறுபோக பயிர்ச் செய்கைக்கு அனுமதிப்பது என குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கரை குளத்தின் நீர் அளவு 30 ஆயிரத்து 982 அடி நீர் காணப்படுகின்ற அதே வேளை 3 அங்குலம் அளவிற்கு நீர் பாய்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் அதி உச்ச அளவாக சிறுபோக செய்கை யை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக வாய்க்கால் துப்புரவு மற்றும் பராமரிப்பு போன்றவை 04-05-2025 இற்கு முன்னர் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும்,மு தல் நீர் விநியோகம் 05-05-2025 அன்று ஆரம்பிப்பது எனவும், விதைப்பை 25-05-2025 இற்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இறுதி நீர் வினியோகம் 24-08-2025 எனவும் தீர்மானிக்கப்பட்டது. சிறுபோக பயிர்ச் செய்கைக்கு என அனுமதிக்கப்பட்ட அளவில் மாத்திரம் சிறுபோக செய்கை முன்னெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலதிகமாக மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை அடாத்து பயிர்ச்செய்கை யாக கருதி கடந்த வருடம் நீதிமன்ற நடவடிக்கைக்கு உற் படுத்தப்பட்டது போல் இம்முறையும் சட்ட நடைமுறைக்கு உற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் அடாத்து பயிர்ச் செய்கையை மேற்கொள்பவர்களுக்கு எதிராக ஒரு ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் எனவும் தண்டம் அறவிடப்படும் என தீர்மானிக்கப்பட்டதோடு, குறித்த விவசாயிகள் விவசாய அமைப்பு ஊடாக 5 வருடங்களுக்கு ஈடுபடாத வகையில் தடை விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அடாத்து பயிர்ச் செய்கையும் நிறுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறு போக பயிர்ச் செய்கையை கருத்தில் கொண்டு,கட்டாக்காலி மாடுகளை தடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் சிறுபோக விவசாயத்தை முன்னெடுக்கும் விவசாயிகள் வேலி அடைத்து,பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்று குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு போகத்திற்கு தேவையான உர மாணியங்கள் வழங்குவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மிக சுமூகமான முறையில் குறித்த தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

[மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here