குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மிதிகம ருவான், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நதுன் சிந்தக அல்லது ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது குடு சலிந்து அகியோர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
விசாரணை தொடர்பான கோப்பு விபரங்களை எதிர்காலத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார்.








