ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (24) விசேட வர்த்தமானியை வெளியிட்டு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

1978 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் பிரிவு 20(4)(அ) சரத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் பாரியளவில் சீர்குலைந்துள்ளதாகவும், அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கு நிறுவன அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டம் அல்லது விதி, ஒழுங்குமுறை, நியதி, சட்டத்தின் கீழ் முறையே பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செயல்படுத்துவதற்கு ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே.ரத்நாயக்க இன்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அப்பதவியில் இருந்து நீக்கியதையடுத்து, ருஹுணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இன்று காலை 7 மணி முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் ஊழியர் சேவை சங்கத்தின் தலைவர் கலம் கமகே தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here