இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்கள், விளையாட்டு திடல்கள், மற்றும் விளையாட்டு மைதானங்களை நேரில் பார்வையிட்டு அவற்றின் நிலைமைகளை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், விளையாட்டு மைதானங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும், நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை ஏற்படுத்துவதற்கும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த களப் பயணத்தில் அமைச்சர் துரையப்பா விளையாட்டரங்கு, சாவகச்சேரி வைத்தியசாலை, சிறுப்பிட்டி கலை ஒளி விளையாட்டு கழகம், ஏழாலை பிரதேசம், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை, வடலியடைப்பு, பன்னாகம் ஆகிய இடங்களுக்கு சென்று விளையாட்டு துறையின் அபிவிருத்தி தொடர்பாக நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள, காங்கேசன்துறை அமைப்பாளர் தோழர் பிரகாஷ், வட்டுக்கோட்டை அமைப்பாளர் தோழர் கனேஷ் ஐயா மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இளைஞர்களின் திறன்களை வளர்த்தெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றும், விளையாட்டு துறையின் மேம்பாடு வடக்கு மாகாண இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]







