அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் நேற்று சனிக்கிழமை மாலை,அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு இந்த துப்பாக்கிச் சூட்டின் போது, அருகில் நின்றிருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் வொஷிங்டன், டி.சி.யில் உள்ள 17வது வீதி மற்றும் பென்சில்வேனியா அவென்யூவிற்கு அருகிலுள்ள ஒரு சோதனைச் சாவடியில், சந்தேக நபர் ஒரு பையிலிருந்து ஆயுதத்தை எடுத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன்போது ரகசிய சேவை அதிகாரிகள் பதிலுக்குச் சுட்டதில், சந்தேகநபர் படுகாயமடைந்துள்ளார். அவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை காயமடைந்த மற்ற நபர், சந்தேகநபரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தாரா அல்லது படையினரின் சூட்டில் காயமடைந்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை மூடப்பட்டது, எனவும் அதே நேரத்தில் ரகசிய சேவைப் பணியாளர்கள் எவரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.







