வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுச் சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்,நாம் வலிந்து தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தள்ளப்படுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சமீப காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னைய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த 7ம் திகதி அன்று மத்திய சுகாதார அமைச்சினால் மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்படுவதாக எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் அதனை அவர் ஏற்காமலும், புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகருக்கும், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையைத் தோற்றுவித்ததுடன் நோயாளருக்குரிய சேவையை வழங்குவதில் பல சிரமங்களை ஏற்படுத்தியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மற்றைய வைத்தியர்களால் முறையாக திணைக்களத்திற்குக் கட்டணம் செலுத்திப் பாவித்து வந்த அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வைத்தியசாலை தங்குமிட விடுதிகளை வற்புறுத்திப் பெற்றுக்கொண்டதுடன் மட்டுமல்லாது அவர் இவ் வைத்தியசாலையின் ஊழியரல்லாத போதும் இதுவரை விடுதியை ஒப்படைக்க மறுத்து வருகின்றார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதனால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரது சாவகச்சேரிக் கிளை நேற்றைய தினம் (17) காலை 8 மணி தொடக்கம் தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்திருந்தும் பொதுமக்களின் நலன் கருதியும், மேலதிகாரிகளின் வாக்குறுதிகளையும் கருத்தில் கொண்டு தொழிற்சங்கப் போராட்டத்தைப் பிற்போட்டு வழமையான நோயாளர் சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
மேலும் சுகாதார அமைச்சர் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் தற்போது வைத்திய அத்தியட்சகராகப் பொறுப்பேற்றுள்ள வைத்தியரே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எனத் தெளிவாகக் கூறியுள்ளமை எமக்கு மன வலிமையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வழமை போல் நோயாளர்களது சேவைகளைச் செவ்வனே இடையூறின்றி வழங்குவதற்கு ஏதுவான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துள்ளது.
இருப்பினும் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுச் சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் ஒட்டு மொத்த சமூகத்தின் நலன் கருதியே நாம் இவ் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம் – என்றுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








