ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம அதிகாரி கபில சந்திரசேன,கொல்லுபிட்டியில் உள்ள தனது இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொல்லுபிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 37-இல் சந்திரசேனவின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
அவர் குறித்த வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமற்ற பிணைதாரர்களைச் முன்னிறுத்தியதன் மூலம் நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகள் மீறப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சந்திரசேனவைக் கைது செய்ய கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம பிடியாணை பிறப்பித்து ஒரு நாளின் பின்னர் இவ்வாறு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது
முன்னதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, சந்திரசேனவுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து, விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தைக் கோரியிருந்தது.
அவர் பிணை நிபந்தனைகளை மீறியதாகவும், அவர் மீது நீதிமன்றம் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்ததாகவும் ஆணைக்குழு குற்றம் சாட்டியது.
2013-ஆம் ஆண்டில் தேசிய விமான நிறுவனத்திற்காக 10 விமானங்களை கொள்வனவு செய்வதில் 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் சந்திரசேன ஒரு முக்கிய நபராக கருதப்படுகிறார்.
அவரது உயிரிழப்பு குறித்த விசாரணைகள் தொடர்கின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.








