ரம்புக்கன–கலகெதர பகுதியை உள்ளடக்கிய மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அடுத்த கட்ட கட்டுமானத்துக்கு 112 பில்லியன் ரூபாய் முழுமையாக அரசாங்க நிதியுதவியுடன் மேற்கொள்ள அமைச்சரவைஅனுமதி அளித்துள்ளது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டம், புதிய கடன்களைப் பெறாமல் இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு மேற்கொள்ளப்படப்படுகிறது. இது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“நமது பொருளாதார மீட்சிக்கான மிக முக்கிய சான்று இது என்றும் கடந்த 18 மாதங்களாக நிதி அமைச்சின் சிறந்த தலைமையின் காரணமாக, ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்ததிட்டம் தற்பொழுது யதார்த்தமாகியுள்ளது,” என அமைச்சர் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் மிக முக்கிய அங்கமாக ரம்புக்கன–கலகெதர வழித்தடம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.








