வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவரது உடல் நிலை தேறி வருவதாக பொலிஸார் நேற்று (20) தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரை அண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகில் இருந்த ஒதுக்கு புறமான இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவன் ஐஸ் போதைப் பொருளை பாவித்ததன் காரணமாக இவ் அசம்பாவிதம் ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த மாணவன் இந்து மதகுரு ஒருவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.








