திறைசேரி நிதி அமைப்பு ஊடுருவப்பட்டு 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை “தொழில்நுட்பப் தவறு” என சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இது 2024-ஆம் ஆண்டின் 44-ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் பொது நிதிப் பொறுப்புக்கூறல் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘எக்ஸ்’ தள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
வரவுசெலவுத் திட்ட மேற்பார்வை மற்றும் செலவினங்களுக்கு அனுமதி அளிப்பதற்குப் பொறுப்பானவராக நிதி அமைச்சர் (ஜனாதிபதி அனுர) காணப்படுகின்றார்.
இதேநேரம் பொதுப் பணத்தைக் கையாளும் கணினி அமைப்புகளை இயக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பானவராக திறைசேரி செயலாளர் காணப்படுகின்றார்.
எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, பொது நிதிகளுக்குப் பாதுகாப்பற்ற அமைப்பு காணப்பட்டிருப்பின், கொள்கைகளை வகுப்பவர்களும், அவற்றை இயக்குபவர்களுமே பொறுப்புக்கூற வேண்டும்.
அரசாங்கம் பகிரங்கமாகப் பேசும் அதே பொறுப்புக்கூறல் விதிகளை இந்த விசாரணையிலும் பின்பற்றுமா?ஒரு விசாரணையில் பெயர்கள் குறிப்பிடப்படும் படும் போது, அது ஜனாதிபதியாக இருப்பின் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா ?
இந்த விடயத்தில் எந்த விதிவிலக்கும் இன்றி முழுமையான, சமமான விசாரணை நடத்தப்பட வேண்டும்., வெளிப்படைத்தன்மை குறித்த தனது கொள்கை விதிகளை இந்த விசாரணையில் புதிய அரசாங்கம் பின்பற்றுமா என்பதற்கான ஒரு சோதனையே இதுவாகும் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.








